நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சி.பி. சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். இவர்களால் சுதந்திரமான விசாரணை நடத்த வாய்ப்பில்லை. எனவே சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என சமூக சமத்துவ படை நிறுவனர் சிவகாமி வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையிலும் அவர் மனு தாக்கல் செய்தார். அதில் விஷ்ணுபிரியா தற்கொலையில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. மாநில போலீசார் மீது புகார்கள் எழுந்துள்ளதால் அவர்களை விசாரிப்பது ஏற்புடையதல்ல. எனவே அவர்களது விசாரணைக்கு தடை விதித்து, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுதாகர், வேலுமணி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர்கள், சி.பி.ஐ. விசாரணை தொடர்பாக, டி.ஜி.பி. மற்றும் உள்துறை செயலாளர் பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.


