திருச்சி அருகே உள்ள திருவெறும்பூர் எழில்நகர் ரோஜா தெருவை சேர்ந்தவர் நல்லமுத்து. இவரது மனைவி லட்சுமி (வயது 63). இவர்களது மகன் ரமேஷ் .இவர் சென்னை போலீஸ் தலைமை அலுவலகத்தில் தொழில் நுட்ப பிரிவில் ஏ.டி.எஸ்.பி.யாக பணியாற்றி வருகிறார். நல்லமுத்து இறந்து விட்டதால் லட்சுமி எழில்நகரில் தனியாக வசித்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர், அவரது உறவினர்கள் சிலருடன் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்றார். இன்று காலை வீட்டிற்கு வந்து பார்த்த போது, பின்பக்க கதவு திறந்து கிடந்தது. இதனால் அவர் அதிர்ச்சியடைந்தார்.
இதேபோல் எழில்நகர் குறிஞ்சிதெருவை சேர்ந்தவர் முருகமாணிக்கம். விருப்ப ஓய்வு பெற்ற பெல் ஊழியரான இவர் திண்டுக்கல்லுக்கு சென்று விட்டு இன்று காலை வீட்டிற்கு வந்தார். அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. மேலும் அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் கோபால் (65). இவர் ஓசூர் சென்று விட்டு வீட்டிற்கு வந்து பார்த்த போது, அவரது வீட்டின் கதவும் திறந்து கிடந்தது.
இது குறித்து திருவெறும்பூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் 3 பேரின் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட முயன்றதும், பீரோவை உடைக்க முடியாததால் கொள்ளையை கைவிட்டு விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதும் தெரியவந்தது.
கடந்த சில மாதங்களாக திருவெறும்பூர் பகுதி யில் கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசை காட்டி வருகின்றனர். இன்று போலீஸ் அதிகாரி வீடு உள்பட 3 வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.


