பெண்கள் பாதுகாப்புக்காக, செல்போனில் எச்சரிக்கை ‘பட்டன்’ ஒன்றை சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி நேற்று கூறினார். டெல்லியில், மாணவிகள் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றி விவாதிக்கும் ‘மாணவர் பாராளுமன்றம்’ என்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். அங்கு அவர் பேசியதாவது:-
ஆபத்து சமயங்களில் பெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ள என்னென்ன முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து நாங்கள் யோசனை கேட்டபோது, நிறைய யோசனைகள் வந்தன. குறுந்தகவல் அனுப்பும் வசதி கொண்ட நெக்லஸ், பிரேஸ்லெட், மோதிரம் ஆகியவற்றை பெண்கள் அணிந்து செல்லலாம் என்று ஒரு யோசனை சொல்லப்பட்டது.
இந்த நகைகளை எப்போதும் அணிந்திருக்க முடியுமா? கிராமப்புற பெண்களுக்கு இவை கிடைக்குமா? எனவே, அனைத்து செல்போன்களிலும் எச்சரிக்கை ‘பட்டன்’ பொருத்தும் யோசனை உதித்தது. அந்த ‘பட்டன்’, ஜி.பி.எஸ். சாதனம் பொருத்தப்பட்டதாக இருக்கும். அந்த பட்டனை அழுத்தினால், சம்பந்தப்பட்ட பெண் இருக்கும் இடம் பற்றிய தகவலுடன் சில குறிப்பிட்ட எண்களுக்கு குறுந்தகவல் போய்ச் சேரும்.
இதன்மூலம், அப்பெண் காப்பாற்றப்படுவார். இதுதொடர்பாக அனைத்து செல்போன் உற்பத்தி நிறுவனங்களுடனும் பேசி வருகிறோம். இந்த ‘பட்டன்’ இன்னும் சில மாதங்களில் நடைமுறைக்கு வரும் என்று கருதுகிறோம் மத்திய அமைச்சர் மேனகா காந்தி பேசினார்.


