2ஜி ஊழலையடுத்து நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய மற்றொரு ஊழல் விவகாரம் நிலக்கரி சுரங்க முறைகேடு.நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பான அனைத்து விசாரணைகளையும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் முடிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு என்பது, ‘‘மத்தியில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது நிலக்கரி வளங்களை பொது ஏல முறையில் உயர்ந்த ஏலதாரருக்கு வழங்காமல், முறையற்ற மற்றும் விதிகளின்றி 142 நிலக்கரி நிலத்தொகுதிகளை தனியார் மற்றும் பங்கு சந்தையிலுள்ள பொது நிறுவனங்களுக்கு சுரங்கம் அமைக்க உரிமம் வழங்கியதால் அரசுக்கு சுமார் 1 லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக” தலைமை கணக்காயர் அலுவலகம் தெரிவித்த குற்றம்சாட்டே ஆகும்.
இந்த முறைகேடு தொடர்பான பல்வேறு வழக்குகளை உச்சநீதிமன்றம் கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரதமராக இருந்த காலத்தில் சுரங்கத் துறையையும் சேர்த்து கவனித்து வந்ததால் வழக்கில் அவரையும் சேர்க்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்தது. ஆனால், சிபிஐ இந்த கோரிக்கையை நிராகரித்து விட்டது.
தற்போது, வழக்கு தொடர்பான விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் டிசம்பர் 31-ம் தேதிக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று சிபிஐ.க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


