சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் பாதுகாப்பை மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை அல்லது அதுபோன்ற ஓர் அமைப்பிடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இரு நீதிமன்றங்களுக்கும் போதிய பாதுகாப்பு அளிக்கப்படுவதால் மத்திய படை பாதுகாப்பு அவசியமில்லை என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சுதந்திரமான ஒரு அமைப்பைக் கொண்டு உயர்நீதிமன்றத்துக்கு தற்காலிகமாக பாதுகாப்பு வழங்குவது அவசியம். அதன்மூலம், சுமுகமான பணிச்சூழல் உருவாகும். அதே வேளையில், தமிழக காவல்துறையினரை விலக்கிக் கொள்ள வேண்டாம் என்று கூறி, வழக்கை ஒத்தி வைத்தனர்.
அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரும் நவம்பர் 16-ம் தேதி முதல் மத்திய படை பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் என்று தலைமை நீதிபதி கவுல் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.
அடுத்த 6 மாதத்துக்கு மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்கும். இதற்காக மத்திய அரசு கோரிய வைப்புத்தொகையான 16 கோடி ரூபாயை 7 நாட்களுக்குள் தமிழக அரசு செலுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கடந்த காலங்களில் நிகழ்ந்த சம்பவங்களை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக கூறிய நீதிபதிகள், டெல்லி, அலகாபாத் உயர்நீதிமன்றங்களில் இதுபோன்ற மத்திய படை பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாக கூறினர்.


