கிரிக்கெட் முன்னாள் வீரரும் பாகிஸ்தானின் எதிர்க்கட்சியான டெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் தலைவருமான, இம்ரான் கானும் அவரது மனைவி, ரெஹாம் கானும் விவாகரத்துக் கோரியிருக்கிறார்கள்.
இம்ரானின் அதிகாரபூர்வ முகனூல் பக்கங்களில் அவரது கட்சியின் பேச்சாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அவர்கள் சுமார் 10 மாதங்களுக்கு முன்னர்தான் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இம்ரான் கானுக்கும், அவரது மனைவிக்கும் இடையே பிரச்சனை என்று பாகிஸ்தான் மீடியாக்களில் கடந்த சில மாதங்களாக செய்திகள் வந்தன. ஆனால் அவற்றை இம்ரான் மறுத்து வந்தார். முன்னதாக இம்ரான் தனது முதல் மனைவி ஜெமிமாவை 2004ம் ஆண்டு விவாகரத்து செய்தார். அவர்கள் இருவரும் ஒன்பது ஆண்டுகளாக கணவன், மனைவியாக இருந்தனர்.
ரெஹாம் கானும் தனது ட்விட்டர் கணக்கில் தாங்கள் பிரிந்துபோக முடிவு செய்ததை உறுதிப்படுத்தினார்.
ஜனவரி மாதத்தில்தான் இந்த இருவரும் இம்ரான் கானின் வீட்டில் திருமணம் செய்து கொண்டனர்.
ஊடகங்கள் இந்த விஷயத்தில் அனுமானரீதியிலான செய்திகளை வெளியிடுவதைத் தவிர்க்கவேண்டும் என்று அவரது கட்சிக்காகப் பேசவல்ல நயீம் உல் ஹக் கூறினார்.
இது குறித்து இனி மேலதிகத் தகவல்கள் தரப்படாது என்றும் அவர் முகனூல் பக்கங்களில் கூறினார்.
இதை தனது ட்விட்டர் கணக்கில் எதிரொலித்த இம்ரான் கான், ” இது எனக்கும், ரெஹாமுக்கும், எங்கள் குடும்பத்தினருக்கும் மிகவும் வலியைத்தரும் காலகட்டம். எங்களது அந்தரங்க விஷயங்கள் குறித்து மரியாதை காட்டுமாறு எல்லோரையும் கேட்டுக்கொள்கிறேன்” என கூறினார்.


