தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிவருகின்றனர்.
துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து சில நாட்களாக பதற்றம் நீடித்தநிலையில், தற்போது இயல்பு நிலை திரும்பத் தொடங்கி உள்ளது. துண்டிக்கப்பட்ட இணையதள சேவையும் நேற்று முதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தூத்துக்குடிக்கு சென்று அரசு மருத்துமவனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவரிடம் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
துணை முதல்வருடன் அமைச்சர் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ ஆகியோரும் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.
பிறகு 10 நிமிடங்கள் மட்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரம் செலவிட்டார் அவர். இதையடுத்து, துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்ட மக்களையோ பகுதிகளையோ பார்வையிடாமல் அவர் அவசர அவசரமாக சென்னைக்குக் கிளம்பிவிட்டார்.




