தீபாவளித் திருநாளை தங்கள் சொந்த மண்ணில் கொண்டாடுவதற்கு ஏதுவாக கடந்த நான்கு வருடங்களாக தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக்கத்தினர் சிறப்புபேருந்துகளை இயக்கி வருகின்றனர்.
அதேபோன்று இந்த வருடமும் தீபாவளித் திருநாளை ஒட்டி சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் முக்கிய ஊர்களுக்கு நவம்பர் 6 ஆம் தேதி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
நவம்பர் 7 ஆம் தேதி 1,146 சிறப்புப் பேருந்துகளும், 8 ஆம் தேதி 825 சிறப்புப் பேருந்துகளும், 9 ஆம் தேதி 1,194 சிறப்புப் பேருந்துகளும் என மொத்தம் 4,271 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
இது தவிர, மாநிலத்தின் முக்கிய ஊர்களிலிருந்து பிற இடங்களுக்கு 7,688 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளதாக அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது
இதேபோன்று, தீபாவளிப் பண்டிகை முடிந்த பின்பு, பொதுமக்கள் மீண்டும் ஊர் திரும்பும் வண்ணம் இதே அளவிலான பேருந்துகள் நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை இயக்கப்படும்.
மேலும், மேற்காணும் நாட்களில் சென்னை மாநகரில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் கணிசமான அளவில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
கடந்த வருடங்களில் மேற்கொள்ளப்பட்டது போல், 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் செல்லும் சிறப்புப் பேருந்துகளில் பயணிக்க விரும்புவோர் www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் கணினி மூலம் உடனடி தள முன் பதிவு செய்யும் வகையில், பொது மக்களின் வசதிக்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 25 சிறப்பு முன் பதிவு மையங்கள் ஏற்படுத்தப்படும் என அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால், அது குறித்து சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்துக் கழக அலுவலக தொலைபேசி எண் 044-24794709-க்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். புகார்களின் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்


