சென்னை:
இப்போதுதான் தமிழக காங்கிரஸ் கட்சி சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. இளங்கோவனை மேலிடம் மாற்றாது என்று கூறியுள்ளார் குஷ்பு.
தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனை பதவியில் இருந்து விலக்கக் கோரி மூத்த தலைவர்கள் பலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவர்கள் அண்மையில் தில்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரை சந்தித்துப் பேசினார்கள். அப்போது அவர்கள் இளங்கோவன் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை கூறினார்கள்.
இதைத் தொடர்ந்து இளங்கோவனை தில்லிக்கு அழைத்து சோனியா பேசினார். இதனால் இளங்கோவன் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், திருநாவுக்கரசர், குஷ்பு ஆகியோர் இளங்கோவனுக்கு ஆதரவளித்துள்ளனர். அவர்கள் சோனியா மற்றும் ராகுலை சந்தித்து இளங்கோவனை மாற்றக்கூடாது என்று வலியுறுத்தினர். இந்தச் சந்திப்புக்கு பிறகு குஷ்பு செய்தியாளர்களிடம் பேசியபோது,
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து இளங்கோவனை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் எதுவும் மேலிடத்தில் இல்லை. எனவே இளங்கோவன் தலைவர் பதவியில் நீடிப்பார். நிச்சயமாக அவர் மாற்றப்பட மாட்டார். தமிழக காங்கிரஸ் கட்சி இப்போதுதான் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. அதற்கு இளங்கோவனின் கடும் உழைப்பும், ஆற்றலுமே காரணமாகும். அவர் வழிகாட்டுதலில் காங்கிரஸ் சிறப்பாக செயல்படுகிறது.
முன்பெல்லாம் தமிழக காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் வெறிச்சோடி காணப்படும். ஆனால் இப்போது சத்தியமூர்த்தி பவனுக்கு தினமும் 300, 400 பேர் வருகிறார்கள். கட்சியில் ஏற்பட்டுள்ள இந்த மறுமலர்ச்சிக்கு இளங்கோவனே காரணம்.
காங்கிரஸ் கட்சி இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளில் மூத்த கட்சி. மிகப் பழமையான கட்சி. ஜனநாயக ரீதியில் கட்சி செயல்படுகிறது. பாரம்பரியம் மிக்க இந்தக் கட்சி தனிநபரை நம்பி இல்லை. லட்சோப லட்சம் தொண்டர்களையும், மக்களையும் சார்ந்தே காங்கிரஸ் கட்சி உள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், காங்கிரஸ்தான் அதிக அளவில் மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது… என்று கூறினார்.


