நீங்கள் ஒருமுறை எங்களை தேடிவந்தால் என்ன? நாங்கள்தான் உங்களைத் தேடிவர வேண்டுமா? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் திமுகவிற்கு கடும் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.
பரமத்தி வேலூர் அருகே தேமுதிக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய விஜயகாந்த் “இங்கு வந்திருக்கும் கூட்டத்தை பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
இந்த கூட்டத்தை பணம் கொடுத்து ஏற்பாடு செய்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார். அதற்கு நான் அவரிடம் “அப்படி கூட்டியிருந்தால் நாங்கள் ஆட்சியை பிடித்திருப்போம்” என்று கூறினேன். எப்பாடு பட்டாவது அதிமுக மற்றும் திமுக கட்சிகளை இந்த முறை ஆட்சியில் அமர விட மாட்டேன்” என்று பேசினார்.
மேலும் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் கருணாநிதி கடைசி நிமிடத்தில் மதிமுகவும் தேமுதிகவும் தேர்தல் நெருங்கும் மாறினாலும் மாறும் என்று கூறியிருக்கிறார். எல்லா கட்சிகளும் உங்களை தேடி வர வேண்டுமா? நீங்கதான் வாருங்களேன்” என்று கருணாநிதி பேச்சுக்கு கடும் காட்டமாக பதிலடி கொடுக்கும் வகையில் விஜயகாந்த் பேசினார்.
தேமுதிக, திமுக கூட்டணியில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இணைய வாய்ப்பிருக்கிறது என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் விஜயகாந்தின் பேச்சு அரசியல் விமரச்சகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


