இந்தியாவை சேர்ந்த இருந்து 19 பேர் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்ததாக தகவல் இந்திய உளவு ஏஜென்ஸிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்டவர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக ஐ.எஸ். தீவிரவாத பிரச்சாரங்களை தொடர்ந்து பின்தொடர்ந்து வருவதாகவும், அவர்களை இந்திய உளவுத்துறை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கொடூர தாக்குதலை ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்தியுள்ள நிலையில்,பிரபல ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றிற்கு இந்திய உளவு ஏஜென்ஸிகள் தெரிவித்துள்ள தகவலில், இந்தியாவில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு வேலைக்காக சென்ற பலர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்திருப்பதாகவும், இந்தியாவில் லஷ்கர்-.இ-தொய்பா தீவிரவாத இயக்கம் தொடர்ந்து அபாயகரமான எதிரியாக இருந்து வரும் நிலையில், தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதமும் இந்தியாவில் பரவி வருவது கவலையளிக்கும் ஒன்றாக மாறியிருப்பதாக கூறியுள்ளது. எனினும், ஐரோப்பாவில் இருக்கும் அளவிற்கு இந்தியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் வலுப்பெறவில்லை, இந்தியாவில் ஐ.எஸ். தீவிரவாதம் குறித்த பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதை தொடர்ந்து உளவு ஏஜென்ஸிகள் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இந்த தீவிரவாத இயக்கம் எந்த அளவுக்கு வேகமாக வளர்ச்சியடைகிறதோ அதை பொறுத்தே இந்தியாவில் ஐ.எஸ். தீவிரவாதத்தின் நடவடிக்கைகள் இருக்கும் என உளவு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. முன்னதாக, கவுகாத்தியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசுகையில், சில இந்திய இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தால் மூளைச்சலவை செய்யப்பட்டு அதில் இணைந்துவிடுகிறார்கள். அதை நாம் சாதாரணமாக எடுத்துக்கொண்டுவிட முடியாது. இதை ஒரு சவாலாகவே இந்தியா கருதுகிறது என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


