விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர், 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டெஸ்டில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. இந்தியா- இங்கிலாந்து இடையிலான டி20 தொடர் இன்று தொடங்குகிறது. மான்செஸ்டரில் நடைபெறும் இரு அணிகளும் பலப்ரீட்சை நடத்துகின்றன.
காயம் காரணமாக வேகப்பந்து வீரர் பும்ரா, தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீரர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் விலகி உள்ளனர். அவர்களுக்கு பதிலாக தீபக் சாஹர், குருணால் பாண்டியா இடம் பெற்றுள்ளனர். இருவரும் ஐபிஎல் தொடரில் முத்திரை பதித்தவர்கள்.
கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா, தவான், டோனி, கேஎல் ராகுல், ரெய்னா, ஹர்த்திக் பாண்டியா ஆகியோர் அதிரடியை வெளிப்படுத்தக் கூடியவர்கள். பந்துவீச்சில் சாஹல், குல்தீப் யாதவ் முத்திரை பதிக்க கூடியவர்கள். 11 பேர் கொண்ட வீரர்கள் தேர்வு கோலிக்கு கடும் கவாலாக இருக்கலாம். ரெய்னா- ராகுல் இடையே ஆடும் லெவனில் இடம்பிடிக்க கடும் போட்டி நிலவும்.
இங்கிலாந்து அணியில் கேப்டன் மோர்கன், ஜேசன் ராய், பேர்ஸ்டோவ், ஜோ ரூட், பட்லர் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். இரு அணிகளும் இதுவரை 11 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 5 ஆட்டத்திலும், இங்கிலாந்து 6 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 10 மணிக்கு தொடங்குகிறது.



