சென்னையில் 44-ஆவது ஆண்டு கம்பன் விழா இன்று தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது. விழாவில் பட்டிமன்றப் பேச்சாளர் சாலமன் பாப்பையாவுக்கு கம்பர் விருது வழங்கப்படுகிறது.
இது குறித்து கம்பன் கழகத்தின் தலைவர் இராம. வீரப்பன், துணைத் தலைவர் ஏவிஎம் சரவணன், செயலாளர் இலக்கிய வீதி இனியவன், இணைச் செயலாளர் சாரதா நம்பி ஆரூரன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், கம்பன் கழகத்தின் 44-ஆவது ஆண்டு விழா கம்பனில் மகளிர் மாண்பு’ என்ற மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு சென்னை மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஏவிஎம் ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.
சாலமன் பாப்பையாவுக்கு விருது: விழாவில் தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் கலந்து கொண்டு சாலமன் பாப்பையாவுக்கு கம்பர் விருது, காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு பேராசிரியர் கே.சுவாமிநாதன் நினைவுப் பரிசு, பேராசிரியர் வ.ஜெயதேவனுக்கு கம்பன் கழகத்தின் நிறுவனர் நீதிபதி மு.மு.இஸ்மாயில் நினைவுப் பரிசு ஆகியவற்றை வழங்கவுள்ளார்.
இதைத் தொடர்ந்து கலை, இலக்கியத் துறைகளில் புகழுடன் விளங்கும் 16 பேருக்கு பரிசுகளும், மாநில அளவிலான இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும். விழாவில் கம்பனில் உணர்ச்சி மேலாண்மை’ என்ற தலைப்பில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி வெ.இறையன்பு சிறப்புரையாற்றவுள்ளார்.
விழாவின் இரண்டாவது நாளான நாளை காலை 11.30 மணிக்கு சொற்பொழிவாளர் இலங்கை ஜெயராஜ் நடுவராகப் பங்கேற்கும் வழக்காடு மன்றம் நடைபெறும். பிற்பகல் 3 மணிக்கு அமுதக் கடலில் ஆறு துளிகள்’ என்ற தலைப்பில் நெறியாளர் இரா. மாது தலைமையில் நடைபெறும் மாணவர் அரங்கத்தில் 6 மாணவ, மாணவிகள் பங்கேற்றுப் பேசவுள்ளனர். மாலை 5 மணிக்கு கம்பனும் சுவாதித் திருநாளும்’ என்ற தலைப்பில் சொற்பொழிவாளர் சாரதா நம்பி ஆரூரன் இசைப் பேருரையாற்றவுள்ளார். மாலை 6 மணிக்கு பேராசிரியர் தெ.ஞானசுந்தரம் தலைமையில் பன்மொழிச் சோலை நிகழ்ச்சி நடைபெறும்.
கவிதை முன்னேற்றம்’, மகளிர் மன்றம்’: மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு கவிஞர்கள் எஸ்.விஜயகிருஷ்ணன், கண்மணி மைந்தன் ஸ்ரீகாந்த் ஆகியோர் பங்கேற்கும் கவிதை முற்றம்’, காலை 9.45 மணிக்கு பேராசிரியர் தி.இராசகோபாலனின் காணாதன கண்டேன்’ தலைப்பில் சிறப்புரை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
காலை 11 மணிக்கு விழைந்ததும் விளைந்ததும்’ என்ற தலைப்பில் பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் தலைமையில் மகளிர் மன்றம்’ நடைபெறும். அன்றைய தினம் மாலை 4 மணிக்கு கம்பநாடன் கவி’ என்ற தலைப்பில் இலங்கை ஜெயராஜ் சிறப்புரையாற்றுகிறார். மாலை 5 மணிக்கு பேச்சாளர் சுகிசிவம் நடுவராகப் பங்கேற்கும் காப்பிய மாட்சிமையைப் பெரிதும் விளக்கிடும் காட்சிகள்’ என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடைபெறவுள்ளது.