தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா பல்கலை., ஆக்கிரமித்துள்ள 58 ஏக்கர் அரசு நிலத்தை மீட்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறைச்சாலைக்கு ஒதுக்கப்பட்ட 58.17 ஏக்கர் அரசு நிலத்தை தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ளதாக புகார் எழுந்தது. இதை அடுத்து நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்க விசாரித்த இரழ்ண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.
நிலத்தை பல்கலைக்கழகத்திடம் ஒப்படைத்து விடலாம் என்றும் நிலத்தின் சந்தை மதிப்பு ரூ.10 கோடியை பெற்றுக்கொள்ளலாம் என்றும் நீதிபதி நூட்டி ராமமோகன்ராவ் உத்தரவிட்டார். ஆனால் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்றும் உடனடியாக நிலத்தை மீட்க வேண்டும் என்றும் நீதிபதி எஸ்.எம்சுப்ரமணியம் உத்தரவிட்டார்.
இப்படி இரண்டு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பை அடுத்து 3-வது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் வழக்கை விசாரித்தார். இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் உத்தரவை பிறப்பித்தார்.
அதில், சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள 58 ஏக்கர் அரசு நிலத்தை உடனடியாக தமிழக அரசு கையகப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்




