திருச்செந்தூர் ஆவணி திருவிழாவில் இன்று, சுவாமி சண்முகப்பெருமான் பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளுகிறார். அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கடந்த 30ம் தேதி ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்பாள் பல்வேறு வானங்களில் வீதியுலா வரும் வைபவம் நடந்தது. 6ம் திருவிழாவான நேற்று காலை 7 மணிக்கு சுவாமி கோ ரதத்தில் 8 மாட வீதியுலா சென்றார்.
பின்னர் சிவன் கோயில் கடைவீதியில் சுவாமியும், அம்பாளும் எதிர் எதிராக நிறுத்தி வைத்து, கடந்த 6 மாத கால வரவு செலவு விவரம் மற்றும் கோயிலின் சொத்து விவரங்களை சுவாமி, அம்பாளுக்கு கூறி அதற்கான பட்டோலை வாசித்து சுவாமி சார்பாக கோயிலின் பாரம்பரிய ஸ்தலத்தார்கள் சபாவிடம் ஒப்படைப்பது ஐதீகம், அதன்படி நேற்று கோயில் விவரம் வாசிக்கப்பட்டு ஸ்தலத்தார் சபையினர் சார்பாக திருவாபரணம் படிசெப்பு பார்த்து வரும் 1ம் படி ஸ்தலத்தார் கோபியிடம் பட்டோலை ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் சுவாமி, அம்பாள் திருவாவடுதுறை ஆதீனம் மண்டகப்படிக்கு சென்றனர். அங்கு மாலை 4 மணிக்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் பலவகையான அபிஷேகத்தை தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சிவகொழுந்தீஸ்வரர் கோயிலில் இரவு 8.30 மணிக்கு சுவாமி வெள்ளி தேரிலும், வள்ளி அம்பாள் இந்திர விமானத்திலும் எழுந்தருளி எட்டு வீதிகளில் உலா வந்து சிவன் கோயிலை சேர்ந்தனர்.
8ம் திருவிழாவான இன்று காலை 10.30 மணிக்கு சுவாமி சண்முகப்பெருமான் பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளில் உலா வருகிறார்.




