நாஞ்சில் சம்பத் பதவிப் பறிப்பு: ஜெயலலிதா அதிரடி

Published:

சென்னை:

அதிமுக துணை கொள்கை பரப்புச் செயலாளர் பதவியிலிருந்து நாஞ்சில் சம்பத் நீக்கப்படுவதாக முதலமைச்சரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் பதவியிலிருந்து நாஞ்சில் சம்பத் விடுவிக்கப்படுகிறார் என தெரிவித்துள்ளார்.

நாஞ்சில் சம்பத் பதவி பறிப்புக்கு, அவர் தனியார் தொலைக்காட்சிகளில் பங்கேற்ற நேர்காணல் நிகழ்ச்சியில் கட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் விதமாக அளித்த சில பதில்களே காரணம் எனக் கூறப்படுகிறது.

அவர் புதிய தலைமுறை செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியின்போது, வெள்ளம் பாதித்த நிலையிலும், அதிமுக பொதுக்குழு கூட்டம் கோலாகலமாக நடைபெற்றதே என்ற கேள்விக்கு, சாவு வீட்டுக்காக கல்யாணங்கள் நடக்காமலா இருக்கிறது என்று அலட்சியமாக பதிலளித்துள்ளார்.

இந்நிலையில், தொடர்ந்து தந்தி தொலைக்காட்சி கேள்விக்கு என்ன பதில் நிகழ்ச்சிக்காக, ரங்கராஜ் பாண்டே கேள்விகளுக்கு, நாஞ்சில் சம்பத் பதில் கொடுத்துள்ளார். அதன் ப்ரமோ வீடியோ அத்தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டு வந்தது. இந்த டிவியிலும், நாஞ்சில் கூறிய பதில்கள் சர்ச்சைக்கு உரியதாக இருந்தது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

பெருவெள்ளம் புரட்டிப் போட்ட பிறகு பொதுக்குழு கூட்டம் கோலாகலமாக, கொண்டாட்டமாக நடக்கும்போது சரியா என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறதே என்று கேள்விக்கு நாஞ்சில் சம்பத், ‘எறும்புகள் சாகிறது என்பதற்காக யானை நடக்காம இருக்க முடியுமா’ என்று பதில் சொல்லும் காட்சியும் காண்பிக்கப்பட்டது.

வெள்ளத்தில் உயிரிழந்த 500 பேரை ஏன் கண்டுகொள்ளவில்லை, அதிமுக பொதுக்குழுவில் அதுதொடர்பாக ஏன் தீர்மானம் நிறைவேற்றவில்லை? என்ற கேள்விக்கு, தேவையில்லை, நிறைவேற்றவில்லை என்று நாஞ்சில் பதிலளிப்பது போல காட்சி ஒளிபரப்பானது.

இந்தப் பேட்டிகள் உண்டாக்கிய கசப்பு உணர்வுகள் பரவுவதற்கு முன்னரே, அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவே நாஞ்சில் சம்பத் பதவியைப் பறித்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது!

ஜெட் வேகத்தில் கட்சியில் பதவியைப் பிடித்த நாஞ்சில் சம்பத், ராக்கெட் வேகத்தில் அதை இழந்துள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.

முன்னர் மதிமுக., வில் இருந்தபோது, ஜெயலலிதாவை அதிகம் விமர்சித்தவர் இவர். பின்னர் வைகோ.,வுடன் ஏற்பட்ட கசப்புணர்வில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வெளியில் வந்தவர் அதிமுகவில் போய்ச் சேர்ந்தார். அவருக்கு கட்சியில் துணை கொள்கை பரப்புச் செயலர் பதவியும், ஒரு இன்னோவா காரும் வழங்கப்பட்டது. முதலமைச்சரின் கையால் அவர் பெற்றுக் கொண்ட இன்னோவா கார் சாவி குறித்த படங்கள் அப்போது சமூக வலைத்தளங்களில் பெரிதும் பகிரப்பட்டு, பலத்த விமர்சனத்துக்கு உள்ளானார் நாஞ்சில் சம்பத். 

ALSO READ:  சோகமான நாள்; திபெத், நேபாளத்தை உருக்குலைத்த திடீர் வெள்ளம், நிலச்சரிவு! அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

Related articles

Recent articles

spot_img