விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை வைத்ததாக. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்,கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான படம் ‘சர்கார்’. நிகழ்கால அரசியலை நேரடியாக சாடியிருந்த, இப்படத்தில் வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
சர்கார் படத்தில் ஆளும் அதிமுக அரசு கொடுத்த மிக்ஸி, கிரைண்டர் உள்பட அரசின் இலவசப் பொருட்களை எரிப்பது போன்ற காட்சி இடம் பெற்று இருந்தது. இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த காட்சி நீக்கப்பட்டது.
இதற்கிடையில் சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர், சர்கார் படத்தில், இலவசப் பொருட்களை தவறாக விமர்சித்துள்ளதாக போலீசில் புகார் அளித்திருந்தார்.
இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த போலீசார், தேவராஜன் அளித்த புகாரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.



