பிளாஸ்டிக்கை தடை செய்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உறுதிபடத் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்து கடந்த ஜூன் 25ஆம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்து.
இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி, பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், பிளாஸ்டிக் மேலாண்மை சட்ட விதிகளின்படி, பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்வதற்கோ, ஒழுங்குமுறைப் படுத்துவதற்கோ மத்திய அரசுக்கு தான் உரிமை உள்ளது; தமிழக அரசு பிறப்பித்த அரசாணை தெளிவாக இல்லை என்று குறிப்பிடப் பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது, பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதித்து, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரினார்.
ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு தள்ளி வைத்தனர்.