ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, 2 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலிய அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டி, மெல்போர்னில் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக ஹனுமா விஹாரி, மயங்க் அகர்வால் களமிறங்கினர். விஹாரி 8 ரன்னில் ஆட்டமிழக்க, மயங்க் அகர்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார். மயங்க் அகர்வால் 76 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
பின்னர், புஜாராவும், கேப்டன் விராட் கோலியும் இணைந்து நிதானமாக ரன் சேர்த்தனர். புஜாரா அரை சதம் அடித்தார். இதை அடுத்து 2 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 215 ரன்கள் எடுத்தது. அப்போது முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. புஜாரா 68 ரன்களுடனும், கோலி 47 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முன்னதாக இரண்டில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.