ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு ஊ ழல் மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை தொடர்பாக கர்நாடக அரசு நேற்று முக்கிய அம்சங்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
சொத்து குவிப்பு ஊ ழல் வழக்கில் முதலமைச்சர் ஜெயலலிதா உள்பட 4 பேரை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மற்றும் தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும் 6 நிறுவனங்களை வழக்கில் இருந்து விடுவித்ததற்கு எதிராகவும் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களின் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வருகிறது. கடந்த 8–ந் தேதி நீதிபதிகள், ஒவ்வொரு தரப்பும் வாதங்களின் முக்கிய அம்சங்களை எழுத்துவடிவில் 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
கர்நாடக அரசு வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாடில் நேற்று முக்கிய அம்சங்களை தாக்கல் செய்யதில் கூறப்பட்டுள்ளதாவது:–
கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை முழுதாக ஏற்றுக்கொண்டாலும் அதில் உள்ள கணக்கு பிழையால் சொத்து விவரங்களின் மதிப்பு தவறாக கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணானந்த் அக்னிகோத்ரி வழக்கின் அடிப்படையில் குற்றவாளிகளை விடுதலை செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கப்பட்ட கடன்களை கணக்கில் எடுத்தும் தவறு நேர்ந்துள்ளது. உயர் நீதிமன்றத்தில் பல பிழைகள் சரி செய்யப்படவில்லை. இந்த வழக்கில் தொடர்புடைய நிறுவனங்களின் சொத்துகள் குற்றம்சாட்டப்பட்டவர்களின் சொத்துகள் அல்ல என்று உயர் நீதிமன்றம் கூறியிருப்பது தவறானதாகும்.
குற்றம்சாட்டப்பட்டவர்களின் சொத்து கணக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற தீர்ப்பில் கொடுக்கப்பட்டுள்ள கணக்கு விவரங்கள் தவறாக உள்ளன.இதுபோல பல்வேறு முக்கிய முரண்பாடுகள் அதில் பட்டியலிடப்பட்டுள்ளன.ஜெயலலிதா உள்ளிட்டோர் தரப்பில் முக்கிய அம்சங்கள் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை.
ஏற்கனவே நீதிபதிகள் உத்தரவிட்டபடி இந்த மனுக்களின் மீதான விசாரணை பிப்ரவரி 2–ந் தேதி தொடங்குகிறது. 3 மற்றும் 4–ந் தேதிகளில் விசாரணை நடைபெறும் என்றும், மேலும் விசாரணையை தொடருவது குறித்து 4–ந் தேதி முடிவெடுக்கப்படும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


