ஜல்லிக்கட்டு உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தேமுதிகவைச் சேர்ந்த வழக்குரைஞர் ஜி.எஸ். மணி நேற்று தாக்கல் செய்தார். மேலும் உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு மீதான நிலுவையில் உள்ள வழக்குகள் மீதான விசாரணையில் தன்னையும் மனுதாரராகச் சேர்த்துக் கொள்ள அனுமதிக்கும்படியும் அவர் கேரிக்கை விடுத்துள்ளார்.
ஜல்லிக்கட்டு தொடர்பாக ஜி.எஸ். மணி தனது மனுவில் தெரிவித்துள்ளதாவது :-
தமிழ்நாட்டில் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வந்த ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டிகளில் காளைகளை ஈடுபடுத்த அனுமதி மறுத்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பால் அந்தப் போட்டிகளை நடத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து, காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் உள்ள போதும், காளைகளை துன்புறுத்தாமல் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம் ஆகியவற்றுக்கு அனுமதி அளித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டது. ஆனால், அதற்கும் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகள் மீதான விசாரணையில் எனது தரப்பு வாதங்களை முன்வைக்க அனுமதி அளிக்க விரும்புகிறேன்.
தேமுதிக சார்பில் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். அதைத் தவிர இந்த மனு தாக்கலுக்கும் அரசியலுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. மூத்த வழக்குரைஞரை வைத்து ஒவ்வொரு விசாரணைக்கும் தலா ரூ.5 லட்சம் வரை செலவு செய்து வழக்காடுவதற்கும் எனக்கு நிதி வசதியில்லை. ஆனால், மக்களின் அடிப்படை உரிமை மறுக்கப்படும் இந்த விஷயத்தில் வாதிட எனக்கு உரிமை உள்ளது என்பதால் இந்த வழக்கில் என்னையும் மனுதாரராகச் சேர்த்து வாதத்தை முன்வைக்க அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடை தொடர்பான தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு, ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் தாக்கல் செய்துள்ள மனு ஆகியவற்றின் மீதான விசாரணை நீதிபதிகள் அறையில் 21-01-2016 நடைபெறும் என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அப்போது ஜி.எஸ். மணியின் மனுவும் பரிசீலனைக்கு ஏற்கப்படலாம் .


