வேலைக்காரச் சிறுமியை கொடுமைப்படுத்தியதாக நடிகை பானுப்ரியா மீது ஆந்திர போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழின் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர் பானுப்ரியா. திருமணத்துக்குப் பின்னர் நடிப்புக்கு முழுக்கு போட்டு நீண்ட இடைவெளியில் டிவி தொடர்களில் நடித்து வருகிறார். ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார் பானுப்ரியா.
இந்நிலையில் பானுப்ரியா வீட்டில் பணியாற்றும் தனது மகளை அவர் கொடுமைப்படுத்துவதாக சிறுமியின் தாயார், ஆந்திர மாநிலம் சாமர்லகோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். தனது மகளை கொடுமைப் படுத்துவதாகவும், சம்பளம் சரியாகத் தரவில்லை என்றும், கேட்டால் திருட்டுப் பழி சுமத்துவதாகவும் அந்தப் புகாரில் கூறியிருந்தார்.
ஆனால், பானுப்ரியா மீடியா ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இது குறித்துக் கூறிய போது, அந்தச் சிறுமி எங்கள் வீட்டில் ஓராண்டுக்கு மேலாக வேலை செய்கிறார். ஐபேட், பணம், கேமரா, நகைகள் என பலவற்றை திருடி தனது தாயிடம் கொடுத்துள்ளார். திருடியது குறித்து கேட்ட போது, உண்மையை ஒப்புக் கொண்டார். அவர்கள் திருடிய பொருட்களை திருப்பிக் கொடுத்துவிட்டார்கள் என்றார்.
இந்நிலையில் சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் ஆந்திர மாநில போலீசார் பானுப்ரியா மற்றும் அவரது சகோதரர் மீது சிறார் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.