செங்கோட்டை: நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து விருதுநகர் வரையிலான பாதையில் மின்மயமாக்கும் பணிகள் எப்போது நடைபெறும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு இந்திய ரயில்வே மின்மயமாக்கல் துறை அதிகாரிகள் பதில் அளித்துள்ளனர்.
இது குறித்து கடந்த 2018 டிச.12அன்று செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்க செயலாளரும் தெற்கு ரயில்வே மதுரை கோட்ட ரயில் உபயோகிப்போர் கலந்தாய்வுக்குழு உறுப்பினருமான பொறியாளர் கே.எச்.கிருஷ்ணன் பிரயாக்ராஜில் (அலகாபாத்) உள்ள இந்திய ரயில்வேயின் மின்மயமாக்கல் மத்திய அலுவலகத்துக்கு செங்கோட்டை — விருதுநகர், தென்காசி திருநெல்வேலி, கொல்லம் புனலூர், புனலூர் செங்கோட்டை ரயில் வழித்தடங்களின் மின்மயமாக்கும் பணி குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு 7 பிப்ரவரி 2019 ல் அலகாபாத் மத்திய மின்மயமாக்கல் அலுவலக அதிகாரி பதில் அனுப்பியுள்ளார். அதில், செங்கோட்டை – விருதுநகர் & தென்காசி — திருநெல்வேலி தடங்கள் — இவற்றில் சர்வே, முழு திட்ட அறிக்கை, வரைபடங்கள் தயாரிக்க காண்ட்ராக்ட் விடப்பட்டு விட்டது. பணிகள் தொடங்கி உள்ளன.
மேலும் கொல்லம் புனலூர் பாதை மின்மயமாக்கலுக்கு இறுதி நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டு விரைவில் உறுதி செய்யப்படும். புனலூர் செங்கோட்டை வழித் தட மின்மயமாக்கல் தெற்கு ரயில்வே வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.. என்று குறிப்பிடப் பட்டிருந்தது.
அதிகாரிகளின் இந்த பதிலுக்காக, செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மத்திய ரயில்வே மின்மயமாக்கல் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பினர்.
முன்னதாக வியாழன் அன்று செங்கோட்டை அருகே உள்ள கேரள மாநிலம் தென்மலை ரயில் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு உள்ள நிலையில் நிறுத்தப்பட்டுள்ள கொல்லம்- சென்னை, கொல்லம்- செங்கோட்டை, கொல்லம்- நாகூர் ஆகிய ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும்; குருவாயூர்- புனலூர் ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும், கொல்லம்- நெல்லை இடையே கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
முன்னாள் எம்பி பாலகோபால் தலைமை தாங்க புனலூர் நகரசபை தலைவர் ராஜகோபால் தென்மலை பஞ்சாயத்து தலைவர் சைலஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்