தேர்தல் காலத்தில் மதுரையில் கள்ளழகர் விழா நடப்பது பற்றி ஆய்வு செய்யப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறினார்.
வரவிருக்கும் 17வது நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் நாட்களை இன்று மாலை 5 மணிக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அரோரா அறிவித்தார். அப்போது, தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று கூறியிருந்தார்.
ஆனால், அந்த நாளில்தான், தமிழகத்தில் முக்கிய நிகழ்வான சித்திரா பௌர்ணமியும், மதுரை தேர்த்திருவிழாவும் தொடர்ந்து கள்ளளழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் நடைபெற உள்ளன.
இந்நிலையில் இது குறித்து பலரும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். சித்திரை நாளில் ஒட்டுமொத்த மக்களும் விழாவில் இருக்கும் போது தேர்தல் தேதி அறிவிக்க்ப் பட்டுள்ளதே என்று கூறினர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, 18ம் தேதி மதுரையின் முக்கிய திருவிழாவான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வு நடைபெற இருக்கிறது! தற்பொழுது தான் கவனத்திற்கு வந்துள்ளது, தேர்தல் காலத்தில் மதுரையில் கள்ளழகர் விழா நடப்பது பற்றி ஆய்வு செய்யப்படும். இது குறித்து தலைமை தேர்தல் ஆணையத்திடம் முறையிடுவோம்.. என்றார்.
மேலும், ஒட்டப்பிடாரம் தொகுதி தொடர்பான வழக்கு வாபஸ் பெறப்பட்டால் தேர்தல் ஆணையத்தின் முடிவை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ!