சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை இன்று காலை திடீரென சந்தித்துப் பேசினார் தேமுதிக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, ”மேகதாது அணை, நிலம் கையகப்படுத்தல் மசோதா, செம்மரக் கடத்தல் என தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரம், தமிழக மீனவர்கள், முல்லைப் பெரியாறு பிரச்னை என 5 முக்கிய பிரச்னைகளை முன்வைத்து, தி.மு.க. தலைவர் கருணாநிதியைச் சந்தித்தேன். மேகதாது விவகாரத்தில் இணைந்து செயல்பட கருணாநிதி உறுதியளித்துள்ளார். மேலும் இந்தப் பிரச்னை தொடர்பாக நாளை பிற்பகல் 12.30க்கு பிரதமரையும் சந்திக்கவுள்ளேன்” என்று கூறினார். கருணாநிதியை, கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சந்தித்துப் பேசியபோது, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், தே.மு.தி.க. பொருளாளர் சுதீஷ், பார்த்தசாரதி எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர்.
கருணாநிதியுடன் திடீர் சந்திப்பு: விஜயகாந்த் விளக்கம்
Popular Categories


