முன்ஜாமீன் கோரி கமல்ஹாசன் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப் பட்டுள்ளது.
சுதந்திர இந்தியாவின் முதல் ஹிந்து தீவிரவாதி என்று மதத்தினை இழுத்து, சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பான வழக்கில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசனின் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது இஸ்லாமியர்கள் அதிகம் நிறைந்த பள்ளப்பட்டியில் பேசிய கமல்ஹாசன், இந்து தீவிரவாதம் என்ற சொல்லைப் பயன்படுத்தினார். இது பெரும் எதிர்ப்பைக் கிளப்பியது.
இதை அடுத்து, மத உணர்வை புண்படுத்தும் வகையில் பேசுதல், மத ரீதியில் மோதலை தூண்டும் வகையில் பேசுதல் என இரண்டு பிரிவுகளில் கமல் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் கமலஹாசன் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி புகழேந்தி முன்பாக வந்தது.
அப்போது கமல் பேசிய பேச்சினை பிரச்சார வீடியோவைக் கொண்டு நுணுக்கமாகப் பார்த்த நீதிபதி, கோட்சேவிற்கு இந்து என்பதைத் தவிர வேறு அடையாளம் இல்லையா? என கேள்வி எழுப்பினார்.
பின்னர் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். மேலும், தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சியினரும், ஊடகங்களும் இது குறித்து விவாதிக்க வேண்டாம் என நீதிபதி அறிவுறுத்தினார். இந்த வழக்கின் தீர்ப்பு இன்னும் இரு தினங்களுக்குள் வெளியிடப் படும் என எதிர்பார்க்கப் படுகிறது.