அனைத்து மதத்தினரையும் ஒருங்கிணைத்து செல்லக் கூடிய கட்சியாக அதிமுக திகழ்கிறது. எனவே தான் தமிழக மக்கள் இந்த அரசு நீடிக்க அங்கீகாரம் வழங்கி வாக்குகளை செலுத்தியுள்ளனர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் கூறினார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று காலை குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திர பாலாஜி தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம் முடிவு தற்காலிக மாற்றமே! திமுக கூட்டணி செய்ய முடியாத பொய்யான வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றனர்.
ஆனால் நரேந்திர மோடி தலைமையிலான அதிமுக – பாஜக கூட்டணி உள்ளவற்றையும், செய்யக்கூடிய வற்றையும் தற்போது உள்ள சூழ்நிலையில் கூறி மக்களிடம் வாக்குகளை சேகரித்தோம்.
இந்த வாக்குறுதிகளை ஏற்ற பொதுமக்கள் அதிமுக கூட்டணிக்கு வெற்றியை வழங்கியுள்ளனர். மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மீண்டும் இரண்டாவது முறையாக பதவியேற்பதற்காக அசுர பலத்துடன் கூடிய வெற்றியை பொதுமக்கள் இந்தியா முழுவதும் வழங்கியுள்ளனர்.
இதே போன்று எடப்பாடி தலைமையிலான அரசு பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்துவதற்காக மக்கள் அங்கீகாரம் அளித்துள்ளனர்.
அனைத்து மதத்தினரையும் ஒருங்கிணைத்து செல்லக்கூடிய கட்சியாக அதிமுக திகழ்கிறது இதற்கு கிடைத்த மகுடமாக பொதுமக்கள் அங்கீகரித்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.