திருபுவனம் பாமக., முன்னாள் நிர்வாகி ராமலிங்கம் படுகொலை செய்யப் பட்ட வழக்கில் தொடர்புடையதாக, தென்காசியைச் சேர்ந்த ஒருவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்று, கைது செய்துள்ளனர்.
கும்பகோணத்தை அடுத்த திருப்புவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் நெல்லை மாவட்டம் தென்காசி முகைதீன் தெருவைச் சேர்ந்த ஷாலி என்ற மைதீன் அகமது ஷாலி (51) என்பவரை தேசிய புலானாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்து கேரளாவுக்கு அழைத்துச் சென்றனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். பா.ம.க. பிரமுகரான இவர், கடந்த பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். தாம் வேலைக்கு ஆட்களை அழைக்கச் சென்ற இடத்தில், இஸ்லாமியர்கள் சிலர் மதமாற்றத்தில் ஈடுபட்டபோது, அவர்களைத் தடுத்ததாலும் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாலும் அவர் படுகொலை செய்யப் பட்டதாகக் கூறப் பட்டது.
இந்தப் படுகொலை வழக்கு தொடர்பாக, திருமங்கலக்குடி நிஜாம் அலி (வயது33), முகமது பர்வீஸ்(26), முகமது தவ்பிக்(29), திருபுவனம் வடக்கு முஸ்லிம் தெருவை சேர்ந்த சர்புதீன்(60), முகமது ரியாஸ்(60), முகமது அசாருதீன்(24), முகமது ரிஸ்வான், ஆவணியாபுரத்தை சேர்ந்த தவ்ஹீத் பாட்சா(26), தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையை சேர்ந்த முகமது இப்ராகிம்(47) உள்பட 11 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில், இஸ்லாமிய பயங்கரவாதிகள் அமைப்பு தொடர்பு இருப்பதாக அறியப் பட்டதால், கடந்த கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி முதல் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சிறப்பு குழுவை அமைத்து, இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். கூடுதல் சூப்பிரண்டு சவுக்கத் அலி தலைமையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் குழு திருபுவனம் வந்து இந்த வழக்கு குறித்து தீவிர விசாரணை நடத்தியது.
ஏற்கெனவே கைது செய்யப் பட்ட 11 பேரிடமும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை சார்பில் அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அது தொடர்பில் நீதிமன்றமும் அனுமதி அளித்தது. இதை அடுத்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் குடியிருப்பு வளாகத்தில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தில் வைத்து 11 பேரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவர்களிடம் நடத்தப் பட்ட விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.
இதை அடுத்து, மேலும் பலர் இந்த விவகாரத்தில் சிக்குவர் விசாரிக்கப்படுவர் என்று கூறப் பட்டது. இந்நிலையில், அவர்கள் அளித்த தகவல்களில் இருந்து சில வீடியோக்களும் சிக்கின.
இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட என்.ஐ.ஏ., அதிகாரிகள் திருநெல்வேலி மாவட்டம் தென்காசியைச் சேர்ந்த மைதீன் அஹமது ஷாலியை விசாரணைக்காக இரு தினங்களுக்கு முன்னர் கொச்சி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணைக்குப் பின்னர் நேற்று இரவு அவர் கைது செய்யப் பட்டதாக, என்.ஐ.ஏ., அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனை தென்காசி உள்ளூர் போலீசாரும் உறுதிப் படுத்தினர்.
[su_posts template=”templates/teaser-loop.php” id=”88323, 82136, 79251, 81781, 84328″ posts_per_page=”5″ order=”desc”]