வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்துள்ள கிராமம் வெங்களாபுரம். இங்கு வசித்து வந்த தம்பதி தனசேகர்,ராதா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
தனசேகர் மினரல் வாட்டர் சப்ளை செய்யும் தொழில் செய்து வந்தார். அந்த தொழிலுக்கு நிறைய இடத்தில் கடன் வாங்கிவிட்டு, அதை திருப்பி தர முடியாமல், கடைசியில் 6 மாசத்துக்கு முன்பு வீட்டை விட்டே ஓடிப்போய்விட்டார்.34 வயதான ராதா, தன் குழந்தைகளையும் வைத்து கொண்டு துன்பப்பட்டு வந்தார். இதில் தனசேகருக்கு கடன் கொடுத்தவர்கள் எல்லாம் ராதாவை தொல்லை பண்ண ஆரம்பித்தனர். அனைவரும் ஒன்றாக வந்து கடனை திருப்பித்தருமாறு கேட்கவும் ராதா மனம் உடைந்திருக்கிறார். சமீப காலமாகவே கடுமையான மன உளைச்சலில் இருந்தார் ராதா.
நேற்றுகூட ஒருசிலர் கடன் தொகைக்காக அசிங்கமாக பேசியிருக்கிறார்கள். இதனால் மனம் உடைந்த ராதா, வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெகு நேரமாக ராதா வெளியே வராததால், அக்கம்பக்கத்தினர் சென்றுபார்த்தனர். அப்போது ராதா தூக்கில் தொங்கியவாறும், பக்கத்திலேயே அவர் பாசமாக வளர்த்த நாய் உட்கார்ந்தபடியும் இருந்ததை கண்டு அதிர்ந்தனர்.உடனடியாக திருப்பத்தூர் தாலுகா காவல்நிலையத்துக்கு தகவல் சொல்லவும், காவல்துறை விரைந்து சென்று சடலத்தை மீட்க முயன்றனர். ஆனால் ராதா வளர்த்த அந்த நாயோ, யாரையுமே ராதா பக்கத்தில் நெருங்க விடவில்லை. ராதாவையே சுற்றி சுற்றி வந்தது. பிறகு ராதாவின் உடல் மீது படுத்து கொண்டு கண்ணீர் வடித்தது. போலீசார் அருகில் சென்றதுமே குரைக்க ஆரம்பித்தது.
அந்த பகுதி மக்கள் அருகில் சென்றாலும், அவர்களையும் ராதாவிடம் நெருங்கவே விடவில்லை. அங்கிருந்த அனைவருமே என்ன செய்வதென்றே புரியாமல் இருந்தன்ர். கண் கலங்கினர்! பின்னர், ஒரு வழியாக அந்த நாயை காவல்துறையினர் அப்புறப்படுத்தி சடலத்தை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாகவும் வழக்கு நடந்து வருகிறது.