நவாபி புலாவ்
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி – ஒரு கப்
வெங்காயம் – ஒன்று
தக்காளி – 2
பூண்டு – 4 பல்
இஞ்சி – 2 இன்ச் துண்டு
பச்சை மிளகாய் – 3
சீரக தூள், தனியா தூள் – தலா ஒரு தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
லவங்கம் – 3
ஏலக்காய் – 3
பட்டை – அரை இன்ச் துண்டு
குருமிளகு – கால் தேக்கரண்டி
பிஸ்தா, பாதாம், வெள்ளரி விதை – ஒரு கப்
உலர்ந்த திராட்சை – ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
வெங்காயம், தக்காளியை நீளமாக நறுக்கி வைக்கவும். இஞ்சி, பூண்டு, மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும். அரிசியை பல முறை அலசி விட்டு ஊற வைக்கவும்.
இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், பட்டை, லவங்கம், மிளகு சேர்த்து பொரிய விடவும்.
பொரிந்ததும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
வாசம் அடங்கியதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக தேவையில்லை ஆனால் கலர் மாறும் வரை வதக்கவும்.
பின்பு தக்காளி மற்றும் தூள் வகைகளை (சீரக, தனியா தூள்) சேர்த்து குழையும் வரை வதக்கவும். தக்காளியை சுடு நீரில் போட்டு தோலுரித்து நறுக்கி சேர்த்தால் சாப்பிடும் போது தோல் மட்டும் தனியாக பல்லில் மாட்டாது.
பின்பு களைந்து வைத்துள்ள அரிசியை சேர்த்து ஐந்து நிமிடம் அல்லது அரிசியில் உள்ள தண்ணீர் வற்றும் வரையில் வதக்கவும். வதக்கி ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து வேக விடவும்.
வேறு ஒரு கடாயில் மீதமுள்ள எண்ணெயை விட்டு சூடானதும் நட்ஸ் மற்றும் திராட்சை சேர்த்து வறுத்தெடுக்கவும். பொன்னிறமானால் போதும் இல்லையென்றால் கசந்து விடும்.
இதை வெந்த புலாவுடன் சேர்த்து ஒரு போர்க் கொண்டு மெதுவாக கிளறவும். இல்லையென்றால் சாதம் உடைந்து விடும். சுவையான ஹைதராபாதி நவாபி புலாவ் ரெடி.
பச்சை மிளகாயை நேரிடையாக எண்ணெயில் போட்டு வதக்குவதால் காரம் கூடும். அதனால் போதிய அளவு காரத்தை கூட்டியோ அல்லது குறைத்துக் கொள்ளலாம். வேண்டுமானால் சிறிதளவு குங்கும பூவை சிறிதளவு பாலில் கலந்து சாதத்தில் தெளித்து விட்டு பரிமாறலாம். வாசமாக இருக்கும். குங்குமப் பூவிருக்கு பல நற்குணங்கள் உள்ளது. அதில் உள்ள “க்ரோசின்” என்ற ஒரு வஸ்து ஞாபக சக்தியை தூண்டுமாம், நினைவாற்றலை பெருக்கும்.