காயம் காரணமாக கவுண்டியில் இருந்து விலகினார் விராட் கோலி. அடுத்த மாதம் நடைபெற உள்ள கவுண்டி கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி கேப்டன் விராட் கோலி விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 1ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் சர்ரே அணிக்காக கோலி விளையாடவுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால் தற்போது நடந்து வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடும்போது அவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. கோலி அந்தக் காயத்திலிருந்து விரைவில் மீண்டு, இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்காக முழு உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என கூறப்பட்டது. இதனால், அவர் கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன்15ஆம் தேதி அவர் உடற்தகுதித் தேர்வில் கோலி பங்குபெற வேண்டும். அதற்குள் முழு உடற்தகுதி பெறுவார் என நம்புவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் சர்ரே அணிக்கு ஆடும் வாய்ப்பு கிடைத்ததால், அவர் இங்கிலாந்து பிட்ச் மைதானத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை தயார் படுத்திக்கொள்ளவும், இங்கிலாந்து தொடரில் சிறப்பாகச் செயல்படவும் வாய்ப்பாக அமையும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், கோலி தற்போது காயத்தால் கவுண்டி போட்டியில் இருந்து விலகியிருப்பது சற்று பின்னடைவு தான் என்று கூறப்படுகிறது.




