பாரதியாரின் கண்ணன் பாட்டு (பகுதி – 19) கண்ணன் – என் சீடன்
~ முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ~
பாடலின் தொடர்ச்சி . . .
ஆடலும் பாடலும் கண்டுநான் – முன்னர்
ஆற்றங் கரையினில் கண்டதோர் – முனி
வேடந் தரித்த கிழவரைத் – கொல்ல
வேண்டுமென் றுள்ளத்தில் எண்ணினேன் – ‘சிறு
நாடு புரந்திடு மன்னவன் – கண்ணன்
நாளுங் கவலையில் மூழ்கினோன்; – தவப்
பாடுபட் டோ ர்க்கும் விளங்கிடா – உண்மை
பார்த்திவன் எங்ஙனம் கூறுவான்?’ … 5
என்று கருதி யிருந்திட்டேன்; – பின்னர்
என்னைத் தனியிடங் கொண்டுபோய், – ”நினை
நன்று மருவூக! மைந்தனே! – பர
ஞான முரைத்திடக் கேட்பைநீ; – நெஞ்சில்
ஒன்றுங் கவலையில் லாமலே – சிந்தை
ஊன்ற நிறுத்திக் களிப்புற்றே தன்னை
வென்று மறந்திடும் போழ்தினில் – அங்கு
விண்ணை யளக்கும் அறிவுதான்! … 6
சந்திரன் சோதி யுடையதாம்; – அது
சத்திய நித்திய வஸ்துவாம்; – அதைச்
சிந்திக்கும் போதினில் வந்துதான் – நினைச்
சேர்ந்து தழுவி அருள்செயும் -; அதன்
மந்திரத் தாலிவ் வுலகெலாம் – வந்த
மாயக் களிப்பொருங் கூத்துக்காண் -‘இதைச்
சந்ததம் பொய்யென் றுரைத்திடும் – மடச்
சாத்திரம் பொய் யென்று தள்ளடா! … 7
”ஆதித் தனிப்பொரு ளாகுமோர்; – கடல்
ஆருங் குமிழி உயிர்களாம்; – அந்தச்
சோதி யறிவென்னும் ஞாயிறு – தன்னைச்
சூழ்ந்த கதிர்கள் உயிர்களாம்; – இங்கு
மீதிப் பொருள்கள் எவையுமே – அதன்
மேனியில் தோன்றிடும் வண்ணங்கள்;- வண்ண
நீதி யறிந்தின்பம் எய்தியே – ஒரு
நேர்மைத் தொழிலில் இயங்குவார்; … 8
”சித்தத்தி லேசிவம் நாடுவார், – இங்கு
சேர்ந்து களித்துல காளுவார்; – நல்ல
மத்த மதவெங் களிறுபோல் நடை
வாய்ந்திறு மாந்து திரிகுவார்; – ‘இங்கு
நித்தம் நிகழ்வ தனைத்துமே – எந்தை
நீண்ட திருவரு ளால்வரும் – இன்பம்
சுத்த சுகந்தனி யாநந்தம்’ – எனச்
சூழ்ந்து கவலைகள் தள்ளியே, … 9
‘சோதி அறிவில் விளங்கவும் – உயர்
சூழ்ச்சி மதியில் விளங்கவும் – அற
நீதி முறைவழு வாமலே – எந்த
நேரமும் பூமித் தொழில்செய்து – கலை
ஓதிப் பொருளியல் கண்டுதாம் – பிறர்
உற்றிடுந் தொல்லைகள் மாற்றியே – இன்பம்
மோதி விழிக்கும் விழியினார் – பெண்மை
மோகத்தில், செல்வத்தில், கீர்த்தியில், … 10
”ஆடுதல், பாடுதல், சித்திரம் -கவி
யாதி யினைய கலைகளில் – உள்ளம்
ஈடுபட் டென்றும் நடப்பவர் – பிறர்
ஈன நிலைகண்டு துள்ளுவார் – அவர்
நாடும் பொருள்கள் அனைத்தையும் – சில
நாளினில் எய்தப் பெறுகுவார் – அவர்
காடு புதரில் வளரினும் – தெய்வக்
காவனம் என்றதைப் போற்றலாம். … 11
”ஞானியர் தம்மியல் கூறினேன் – அந்த
ஞானம் விரைவினில் எய்துவாய்” – எனத்
தேனி லினிய குரலிலே – கண்ணன்
செப்பவும் உண்மை நிலைகண்டேன் – பண்டை
ஈன மனிதக் கனவெலாம் – எங்ஙன்
ஏகி மறைந்தது கண்டிலேன்; – அறி
வான தனிச்சுடர் நான்கண்டேன்! – அதன்
ஆட லுலகென நான் கண்டேன்! … 12
பாடலின் விளக்கத்தை நாளை காணலாம்...