நிலவின் இருள் கவியும் நாலாம் நாளின் நாயகனே! விநாயகனே! ஆற்றோர அரச மரம்… அதில் ஓர் அலங்கார மேடை! ஆனை முகனாய் நீ அமர்ந்தாய்… ஆளரவம் அற்ற தனிமையிலே! பார்வதித் தாய் தன் மகவாய் பாருக்களித்தாளாம்..! தன் மனையைப் பாதுகாத்திட்டாளாம்! பாரதமே பேசுகிறது! உன்னைச் சுற்றிய எனக்கும் உன் தன்மையை, உன் தனிமையை… ஏன் அளித்தாய் நாயகனே? விநாயகனே! பார்வதி தாய் போலே பாரியாள் வேண்டும்..! அன்னையின் அரவணைப்பைப் போல் அகிலத்தில் ஏதும் கிட்டாது! உன் கதை உண்மை பல புகலும்… பிரம்மச்சரியத்தின் புகழுக்கு! ஆனால்… விநாயகா! அகிலத்தில் நாங்களெல்லாம் அரை நொடி வாழ்ந்துவிட்டு காலத்தின் பிடியில் கரைந்து போகக் கூடியவர்கள்! கல்லாய்ச் சமைந்து காலம் வென்று காத்திருப்பின் தன்மையைக் காட்டுபவர்கள் அல்லர்! அதனால்தானோ… உன்னை நினைத்து உயிர் கலக்கும் வேளையிலே… பெண்ணை நினைந்து உள்ளம் புழுங்க வைத்தாய்! காத்திருப்பின் கோலத்தில் கல்லும் கரைந்து போகும்… ஆனால் கல்லினும் வலிய அவள் நெஞ்சம் கரைந்து போகாது… என்னைக் கரைந்து போகச் செய்கிறதே!

