இன்று நாடெங்கும் 73வது சுதந்திர தின திருநாள் கொண்டாடப் படுகிறது. இதை முன்னிட்டு, *சுதந்திர போராட்ட வீரர்கள் மாவீரன் பூலித்தேவன், மாவீரன் ஓன்டிவீரன் ஆகியோருக்கு இந்து முன்னணி இயக்கத்தின் சார்பில் நினைவு மலர் அஞ்சலி செலுத்த இந்து முன்னணி நிர்வாகிகள் சென்றனர்.
அப்போது, அவர்களை சங்கரன்கோவில் பகுதியிலேயே தடுத்து நிறுத்தினர் போலீஸார். டிஎஸ்பி உதய சூரியன், டிஎஸ்பி பாலச்சந்தரன் தலைமையிலான 50 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இந்து முன்னணி பிரமுகர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்து முன்னணி மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் கா.குற்றாலநாதன், தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தில் மட்டுமே இத்தகைய நெருக்கடியும் அச்சமூட்டும் வகையிலான போலீஸாரின் நடவடிக்கையும் இருக்கிறது என்றார்.
நாம் இந்தியாவில் இருக்கிறோமா அல்லது பாகிஸ்தானில் இருக்கிறோமா என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும், போலீஸார், இவ்வாறு சுதந்திரப் போராட்ட வீரர்கள் தியாகியருக்கு அஞ்சலி செலுத்தச் செல்வதை தடுத்து, இந்து முன்னணியினரை கைதுசெய்ததற்காக எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கண்களில் கருப்புத் துணி கட்டி செய்தியாளர்களைச் சந்தித்தார் இந்து முன்னணி மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் கா.குற்றாலநாதன்.
இந்நிலையில், இதனைக் கண்டித்து, செங்கோட்டையில் தடையை மீறி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்து முன்னணியினரை காவல் துறையினர் கைது செய்ததைக் கண்டித்து செங்கோட்டையில் நகர இந்து முன்னணி சார்பில், வாஞ்சிநாதன் சிலை முன்பு தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இது குறித்து தகவல் அறிந்த செங்கோட்டை போலீசார் அப்பகுதிக்கு அவர்களை சென்று கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். இதை அடுத்து இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.