சென்னை:
திங்கள் கிழமை இரவு காலமான முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்., சமாதி அருகே செவ்வாய்க்கிழமை இன்று மாலை 4.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் எனத் தெரிகிறது.
சென்னை அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்று முன்தினம் மாலை திடீர் இதய முடக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அவருக்கு மருத்துவ நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்த ஜெயலலிதா சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு காலமானார். திங்கட்கிழமை இரவு 11.30 மணிக்கு அவருடைய உயிர் பிரிந்ததாக அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டது.
போயஸ் கார்டனில் இறுதி சடங்கு:
ஜெயலலிதாவின் உடல் செவ்வாய்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து அவருடைய இல்லமான போயஸ் கார்டனுக்கு கொண்டு செல்லப்பட்டது. முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் அ.தி.மு.க., அமைச்சர்கள் உடன் போயஸ் கார்டன் சென்றனர். அவரது உடலுக்கு சம்பிரதாய சடங்குகள் நடைபெற்றன. அதிகாலை 4.30 மணி முதல் ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது.
இன்று மாலை 4.30 மணிக்கு மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்., சமாதி அருகே ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் எனத் தெரிகிறது.



