7 வாக்குகளில் தோல்வி அடைந்ததால் அதிமுக வேட்பாளர் மயங்கி விழுந்த சம்பவம் பவானி அருகே பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈரோடு மாவட்டம் பவானி ஊராட்சி ஒன்றியம் மூன்றாவது வார்டு அதிமுக வேட்பாளராக தாளகுளம், ஏரிக்கரையைச் சேர்ந்த ராமலிங்கம் போட்டியிட்டார்.
இவரை எதிர்த்து அதிமுக சார்பில் வெங்கிடு என்பவரும், பி.சதீஷ்குமார் உள்பட 7 பேரும் சுயேச்சையாகப் போட்டியிட்டனர்.
இவர்களுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
ராமலிங்கம் 1,352 வாக்குகளும் சுயேச்சை வேட்பாளர் சதீஷ்குமார் 1,359 வாக்குகளும் பெற்றனர். சுயேச்சை வேட்பாளர் சதீஷ்குமாரை விட 7 வாக்குகள் ராமலிங்கம் பின் தங்கி இருந்தார். இதனால் மறு வாக்குப்பதிவு கேட்டு விண்ணப்பம் அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் 7 வாக்குகள் வித்தியாசத்தில் சுயேச்சை வேட்பாளர் சதீஷ்குமார் வெற்றி பெற்றார்.
அப்போது அதிமுக வேட்பாளர் ராமலிங்கம் திடீரென மயங்கிச் சரிந்தார். அங்கிருந்த சுயேச்சை வேட்பாளர் சதீஷ்குமார் அவரை மீட்டு வெளியே கொண்டு வந்தார்.
7 வாக்குகளில் தோல்வி அடைந்ததால் அதிமுக வேட்பாளர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராமலிங்கத்துக்கு மனிதாபிமானத்துடன் உதவிய சுயேச்சை வேட்பாளர் சதீஷ்குமாரின் செயலையும் அப்பகுதி மக்கள் வரவேற்றுப் பாராட்டினர்.