‘வீட்டில் செய்த பிரியாணி தான் வேண்டும்’ என்று அடம்பிடித்த, ‘கொரோனா’ தொற்று இளைஞர் மருத்துவமனையில் கண்ணாடியை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை, வரதராஜபுரம், இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் கொரோனா தொற்று நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட, 90க்கும் மேற்பட்டவர்கள், இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு வீட்டு உணவு எதுவும் வழங்கப்படுவதில்லை.
டாக்டர்கள்அறிவுரைப்படி மருத்துவமனையில் கீரை, சத்து கஞ்சி போன்ற எதிர்ப்புசக்தி அதிகரிப்பு உணவு வகைகள் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.நேற்று மதியம், சிகிச்சை பெற்று வரும், 28 வயது நபர், ‘பிரியாணி தான் வேண்டும்; வீட்டுஉணவு சாப்பிட அனுமதிக்க வேண்டும்’ என்று கூறி, செவிலியர்களுடன் தகராறில் ஈடுபட்டார்.
மேலும ஆத்திரமடைந்த அந்த நபர், அங்கிருந்த தீயணைப்பு கருவியால் மருத்துவமனை கண்ணாடியை உடைத்தார். இதை பார்த்து அங்கிருந்தவர்கள் மருத்துவமனை நிர்வாகத்தில் புகார் அளித்தனர் .ஆர்.எம்.ஓ., குழந்தைவேலு சிங்காநல்லுார் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் மருத்துவமனை சென்று விசாரணை நடத்தினர். இச்சம்பவத்தால் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது