குடும்ப வன்முறை தொடர்பான ஆன்லைன் புகார்களைப் பெறுவதில் சென்னை முதலிடத்திலும், திருச்சி, தேனி அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளது.
தமிழகத்தில் கிராமங்களைத் தவிர்த்து, நகரங்களில் அன்றாடம் வேலைக்குச் செல்லும் பெரும்பாலான ஆண்களும், பெண்களும் விடுமுறை நாட்கள் தவிர, மற்ற நாட்களில் இரவு நேரத்தில் மட்டுமே குடும்பத்தினருடன் சில மணி நேரம் கூடியிருக்கும் சூழல் உள்ளது.
தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு ஊடரங்கினால் கணவன், மனைவி, குழந்தைகள், பெரியவர்களுடன் அனைவரும் வீட்டுக்குள் முடங்கி இருக்கின்றனர்.
இது நல்தொரு சந்தர்ப்பம் என்றாலும், கணவன், மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் ஏற்படும் கருத்து மோதல், குடும்ப பிரச்சினைக்கான தீர்வுக்கு பெண்கள் வெளியில் காவல் நிலையத்தையோ, உறவினர்களையோ அணுக முடியாது.
இச்சூழலில் குடும்ப வன்முறை குறித்த புகார்களை ஆன்லைனில் தெரிவித்து, தீர்வுகளைக் காண தேசிய, மாநில சமூக நலவாரியம் மாவட்டந்தோறும் கவுன்சிலர்களை (உளவியலாளர்) நியமித்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் பகுதிக்கு நாகராஜன் (81248-10000), சோழவந்தான் பகுதிக்கு அந்தோனி சர்மிளா (81247-10000), சமயநல்லூர் பகுதிக்கு கண்மணி (9894558205) உட்பட தமிழகம் முழுவதும் 35-க்கும்மேற்பட்ட கவுன்சிலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஊரடங்கு காலத்தில் கணவன்- மனைவி இடையே பொருளாதார நெருக்கடி தொடங்கி டிவி சேனல் மாற்றுவது உள்ளிட்ட பிரச்சினை வரை ஏற்படும் குடும்ப வன்முறை தொடர்பான புகார்களை ஆன்லைனில் மூலம் பெற்று, அதற்கான தீர்வையும் ஆன்லைன் வழியாகவே அளிக்கின்றனர்.
தீர்க்க முடியாத சில புகார்களுக்கு மகளிர் காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்து, மகளிர் காவலர்கள் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் மூலமும் தீர்க்க ஏற்பாடு செய்கின்றனர்.
ஒவ்வொரு கவுன்சிலருக்கும் சரசாரியாக தினமும் 3 முதல் 5 புகார்கள் என தமிழகளவில் தினந்தோறும் 45-50 புகார்கள் வருவதாகவும், இதுவரை 1800-க்கும் மேற்பட்ட புகார்களைப் பெற்று உடனுக்குடன் உரிய வகையில் கவுன்சிலிங் அளித்து தீர்க்கப் பட்டதாகவும் கவுன்சிலர்கள் தெரிவிக்கின்றனர்.
கவுன்சிலர் நாகராஜன் கூறுகையில், ”கொரோனா ஊடரங்கின்போது, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஓரிடத்தில் கூடியிருப்பதால் ஏதாவது சிறு, சிறு பிரச்னை உருவாகிறது. இருப்பினும், பெரும்பாலும் பண நெருக்கடி, மது குடிக்காமல் ஏற்படும் மன உளைச்சலில் குடும்பத்தில் தகராறு, மாமியார், மருமகள் பிரச்னை குறித்த புகார்களே அதிகரிக்கிறது.
ஊரடங்கு நேரத்தில் நாங்கள் கொடுக்கும் அறிவுரைகளைப் பெரும்பாலும் ஏற்று அமைதியாகின்றனர். தற்போதைக்கு சென்னை முதலிடத்திலும், அடுத்து திருச்சி, தேனியிலும் புகார் அதிகரிக்கிறது. புகாருக்கு கவுன்சிலிங் அளிக்க எந்தநேரத்திலும் தயாராக இருக்கிறோம்,” என்றார்.