தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2000ஐ கடந்துள்ள நிலையில், 1000க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியான சென்னையில், 600க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரவியுள்ளது. அங்கு மக்கள் அதிகமாக நடமாடும் பகுதியான கோயம்பேடு சந்தையில் கடந்த 2 நாட்களில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் கோயம்பேடு சந்தை வியாபாரிகள் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நெற்குன்றத்தை சேர்ந்த 64 வயதான வியாபாரிக்கும், மதுரவாயில் பகுதியைச் சேர்ந்த 26 வயது நபருக்கும் கோயம்பேடு சந்தை H பிளாக்கில் காய்கறி மொத்த விற்பனை செய்து வந்தவருக்கும் தற்போது கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் மூவரும் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்களுடன் தொடர்பில் இருந்து மற்ற வியாபாரிகளுக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளதா என்பது குறித்து பரிசோதனை நடைபெற்று வருகிறது.
கோயம்பேடு சந்தை வியாபாரிகள் வசிக்கும் இடங்கள், மார்க்கெட்டுக்கு வந்து செல்லும் நபர்கள் என பெருமளவில் இந்த தொற்று பரவ வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் அபாயம் தற்போது நிலவுகிறது. இது சென்னைவாசிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனால் கோயம்பேடு மார்கெட்டில் காய்கறி சில்லரை வியாபாரம் செய்ய அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகாலை முதல் காலை 7.30 மணி வரை மட்டுமே சில்லரை வியாபாரிகள் காய்கறி வாங்கி செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே காய்கறி வியாபாரிகளுடன் மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து இன்றும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.