பாலியல் தொழிலில் சம்பாதித்த பணத்தை பங்குபோடும் போது ஏற்பட்ட தகராறில் இளைஞரை கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அசோக் நகர் ராகவன் காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இளைஞர் ஒருவர் தீக்காயங்களோடு கிடப்பதாக காவலாளி காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அங்கு விரைந்த போலீசார் இளைஞரை மீட்டு முதல் உதவி சிகிச்சை அளித்தனர் .
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பெயர் தீபக் என்பதும் , தில்லியை பூர்வீகமாக கொண்டவர் என்றும் தெரியவந்தது
சமைக்கும் போது ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியதாக அவர் வாக்குமூலம் அளித்தார். ஆனால் அவரது உடலில் ரத்த காயங்கள் இருந்ததால் சந்தேகமடைந்த போலீசார் அவரது அறையை சோதனை செய்ய சென்ற போது, அந்த அறை வெளிப்புறம் பூட்டப்பட்டிருந்தது.
பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தரையில் ரத்தம் சிந்திக் கிடக்க, ரத்த கரைகளோடு கூடிய கத்தி மற்றும் மண்ணெண்ணெய் கேன் ஆகியவை கிடந்தன. சந்தேகம் அதிகரிக்கவே போலீசார் தீபக்கின் செல்போனை ஆய்வு செய்ததில் அவர் அடிக்கடி பேசிய இரண்டு எண்கள் மீனம்பாக்கம் விமான நிலையப் பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக மீனம்பாக்கம் விமான நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீபக்கின் வீட்டிலிருந்து வெளியேறிய 2 பேரின் சி.சி.டி.வி. காட்சிகளும் அனுப்பி வைக்கப்பட்டன. அதன் அடிப்படையில் ஒரு பெண் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டு குமரன் நகர் காவல் நிலையம் அழைத்து வரப்பட்டனர்.
பிடிபட்ட இருவரும் தில்லியை சேர்ந்த ஹம்தன் மற்றும் நிலா அக்தர் என்பது தெரியவந்தது. துணி வியாபாரம் செய்து வந்த இவர்கள், பெரிய லாபம் இல்லை என்பதால் ஹம்தன் வழிகாட்டுதல்படி மும்பை தில்லி ஆகிய பகுதிகளில் இருந்து பெண்களை வரவழைத்து இருவரும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினர்.
அப்போது அறிமுகமானவர்தான் நிலா அக்தர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. வடமாநிலங்களில் இருந்து பெண்களை அழைத்து வந்து இரண்டு மூன்று நாட்களில் மீண்டும் அனுப்பிவைத்துவிடுவர். அப்படி நிலா அக்தரை அனுப்பி வைக்கும் போது தீபக், ஹம்தன் ஆகிய இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த ஹம்தன், நிலாவின் உதவியுடன் தீபக்கை கத்தியால் குத்தி, மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்தி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். பின்னர் இருவரும் தப்பித்து மும்பை செல்ல திட்டமிட்டிருந்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்