தேனி :
சபரிமலைக்குச் செல்வதற்கு பக்தர்கள் பெரும்பாலும் பயன்படுத்துவது, கம்பம் குமுளி வழியான பெருவழிப் பாதைன் மற்றும், செங்கோட்டை புனலூர் வழியிலான பம்பை பாதை.
தற்போது, சபரி மலை சீசன் தொடங்கிவிட்டதால், மண்டல பூஜைக்குச் செல்லும் பக்தர்கள் அதிக அளவில், கம்பம் வழியே செல்லும் பாதையை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, தனிப்பட்ட வாகனங்கள், சுற்றுலா வேன்கள், கார்களில் அதிகம் வருவதால், கம்பம் வழிப் பாதையில் பெரும் நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகனங்கள் பெருமளவில் கம்பம் பாதையில் வரிசை கட்டி நிற்கின்றன.
கம்பம் மலைப்பாதையில் ஏற்படும் போக்கு வரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் விதமாக, அந்தப் பாதையை ஒருவழிப் பாதையாக மாற்ற போக்குவரத்து போலீசார் முடிவு செய்தனர். இதனால் அந்தப் பகுதியில் வாகனங்கள் தடையின்றிச் செல்லும் என்பதுடன், பாதுகாப்பான மலைப் பயணத்தை உறுதி செய்வதாகவும் அமையும் என்பதால், தேனி மாவட்ட காவல் துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி, கம்பம் வழியாக சபரிமலை செல்லும் பாதை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் கம்பமெட்டு, நெடுங்கண்டம் பாதையை பயன்படுத்தலாம். இதே போன்று சபரிமலையில் இருந்து திரும்ப வரும் பக்தர்கள் குமுளி பாதையை பயன்படுத்த வேண்டும் என தேனி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.