சென்னை நொளம்பூரில் நடைபாதையில் வைத்து நேற்று முன்தினம் நள்ளிரவு மனித உடலை 2 பேர் எரித்துக் கொண்டிருந்தனர்.
இரவில் டீ விற்பனை செய்யும் தர்மராஜ்(30) என்பவர் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக தர்மராஜ் இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். நொளம்பூர் போலீசார் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
அப்போது, போலீசார் வாகனம் வருவதை கண்டதும் சடலத்தை எரித்துக் கொண்டிருந்த நபர்கள் தப்பி ஓட முயன்றனர்.
எனினும் இருவரையும் போலீசார் விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், இருவரும் நேபாளத்தைச் சேர்ந்த விஷ்ணு(33), பாஸ்கர்(44) என்பது தெரிந்தது.
மேலும், குப்பை பொறுக்கும் இவர்கள், உடன் குப்பை பொறுக்கும் சிவக்குமார்(25) என்பரை கொலை செய்து உடலை எரித்தது தெரியவந்தது. சம்பவத்தன்று விஷ்ணு, பாஸ்கர், சிவக்குமார் ஆகியோர் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். பின்னர் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு உண்டாது. இதில், விஷ்ணுவும் பாஸ்கரும் சேர்ந்து சிவக்குமாரை கல்லால் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
‘இதனையடுத்து கொலையை மறைக்க இருவரும் அவரது உடலை எரித்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து பாதி எரிந்த நிலையில் சிவக்குமார் சடலம் மீட்கப்பட்டது.
இந்நிலையில், கொலையாளிகளை பிடிக்க உதவும் வகையில் தகவல் அளித்த டீ வியாபாரியை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.