சென்னை: மீத்தேன் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம் என்று தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கமணி உறுதிபடத் தெரிவித்தார். தமிழக சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மனித நேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா பேசும் போது, காவிரி படுகை பகுதியில் மீத்தேன் எடுப்பதற்காக ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. இந்தத் திட்டத்தின் சாதக- பாதகங்களை அறிவது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் நிலையை அறிய விரும்புகிறேன் என்று கேட்டார். இதற்கு பதில் அளித்துப் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கமணி… தமிழக அரசு அமைத்துள்ள குழுவானது, தனது ஆய்வினை முழுமையாக முடிக்கவில்லை. இதனால் அறிக்கை வரவில்லை. இந்தப் பிரச்னையை வைத்து அரசியல் செய்ய நினைக்கிறார்கள். மக்களைப் பாதிக்கும் எந்தத் திட்டத்துக்கும் அரசு அனுமதி தராது என்றார்.

