காஞ்சிபுரம்:
வேத மந்திரங்கள், அபிஷேக ஆராதனைகளுடன் காஞ்சி காமகோடி பீடத்தின் 69ஆவது பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திரரின் புதவுடல் இன்று காலை 9 மணிக்கு மேல் பிருந்தாவனத்தில் அமர்த்தப் பட்டது.
காஞ்சி காமகோடி பீடத்தின் 69ஆவது பீடாதிபதி காஞ்சிப் பெரியவர் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று காலை 7.45 மணி அளவில் தமது 84ஆம் அகவையில் ஸித்தியடைந்தார். மாரடைப்பு காரணமாக உயிர் பிரிந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து சங்கர மடத்துக்கு அவரது பூதவுடல் கொண்டு வரப்பட்டது. பின்னர் மடத்தின் மகாபெரியவர் பிருந்தாவனத்துக்கு எதிரே வழக்கமாக ஜயேந்திரர் பக்தர்களை சந்தித்து வந்த அறையில் பக்தர்களின் அஞ்சலிக்காக ஸ்ரீ ஜயேந்திரரின் உடல் வைக்கப்பட்டிருந்தது.
பின்னர் வேத மந்திரங்கள், அபிஷேக ஆராதனைகளுடன் ஸ்ரீ ஜயேந்திரர் உடல் இன்று காலை பிருந்தாவன பிரவேசம் நடைபெறும் என்று காஞ்சிபுரம் சங்கர மடம் நேற்று அறிவித்திருந்தது.
இதை அடுத்து இன்று காலை, அவரது பூதவுடலுக்கு இறுதிச் சடங்குகள் முடிவடைந்து, சங்கர மடத்துக்குள் உள்ள மகாபெரியவர் பிருந்தாவனத்தை அடுத்து பிருந்தாவனத்தில் அமர்த்துவதற்கான பணிகள் தொடங்கின. முன்னதாக வேத மந்திரங்கள் முழங்க, அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அவர் அமர்ந்திருக்கும் அதே நாற்காலியில் வைத்து சங்கரமடத்தின் பிருந்தாவனம் பகுதியில் ஸ்ரீ ஜயேந்திரரின் பிருந்தாவன பிரவேசம் நடைபெற்றது.
ஸ்ரீ ஜயேந்திரரின் பூதவுடலுக்கு நடைபெற்ற அபிஷேக ஆராதனைகளை பொதுமக்கள் காணும் வகையில், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சங்கர மட வளாகத்தில் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஏராளமான பக்தர்கள் ஸ்ரீ ஜயேந்திரருக்கு தங்கள் அஞ்சலியை காணிக்கை ஆக்கினர்.
முன்னதாக, ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அஞ்சலி செலுத்தினார்.
ஜயேந்திரர் உடலுக்கு அஞ்சலி செலுத்த முக்கியத் தலைவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் வரும் நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சங்கர மடம் நோக்கிச் செல்லும் முக்கியச் சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது.
ஸ்ரீ ஜயேந்திரர் பிருந்தாவனப் பிரவேசம் ஆனதை முன்னிட்டு காஞ்சி காமாட்சியம்மன் கோயில் பிரம்மோற்சவ நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. கோயில் நடையும் காலை முதல் மூடப்பட்டு பின்னர் ஆகம விதிகளின்படி மாலை 4 மணிக்கு மேல் நடை திறக்கப்பட்டது.