கோவை:
கமல் கடந்த சில மாதங்களாக அரசியல் ரீதியான கருத்துகளைத் தெரிவித்து வந்தாலும், டிவிட்டர் வழியே அரசியல் நடத்தினாலும், புதிய கட்சி அமைப்பைத் தொடங்கி கட்சிக் கொடி, உறுப்பினர் நியமனங்கள் என செய்தாலும் இப்போதுதான் அரசியல்வாதி அந்தஸ்துக்கு உயர்ந்திருக்கிறார். காரணம், எவர் நட்பு என் அரசியல் களத்துக்கு முக்கியம் என்று சொல்லி கட்டித் தழுவி ஆசி பெற்றாரோ அவரை இப்போது கடுமையாக விமர்சித்துள்ளதுதான்!
காவிரி விவகாரம் என்றில்லை, பல விஷயங்களில் ரஜினிகாந்த் பதிலளிக்காமல் நழுவுகிறார் என்று கமல், ரஜினி மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
இப்போது சுற்றுப் பயணத்தில் இருக்கிறார் கமல். கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல், கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “தண்ணீர் சேமிப்பில் விவசாயிகள் மட்டுமின்றி அனைவரும் ஈடுபட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும். காவிரி பிரச்னையை தீர்க்க முடியாத பிரச்னையாக மாற்றி இருக்கக் கூடாது” என்று கூறினார்.
ரஜினி கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்பதால், காவிரிப்பிரச்னையில் ரஜினி பெரும்பாலும் கருத்து சொன்னதில்லை. இதனை சுட்டிக் காட்டிய செய்தியாளர்கள், கமலிடம், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான கேள்விக்கு ரஜினி பதில் அளிக்க மறுக்கிறாரே என்று கேட்டனர். அதற்கு அவர், காவிரி விவகாரம் என்று இல்லை; அவர் பல விஷயங்களில் பதில் சொல்ல மறுக்கிறார். அந்த இடத்திலிருந்து நழுவுகிறார் என்று ரஜினியை விமர்சித்தார்.
இரு தினங்களுக்கு முன்னர் ரஜினி இமயமலை ஆன்மிக பயணத்துக்குக் கிளம்பினார். அப்போது விமான நிலையம் வந்த அவரிடம் செய்தியாளர்கள், ரஜினியின் இமயமலைப் பயணம் குறித்து கேட்டனர். அதற்கு பதிலளித்தவர், காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக கேள்வி எழுப்பினர். அவர் எந்த பதிலையும் சொல்லாமல் விறுவிறு வெனச் சென்றார் என்பது குறிப்பிடத் தக்கது.