சென்னை: திராவிட இயக்கத்தின் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்தார் ம.நடராசன். மொழிப்போர் காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது என்று சென்னை பெசண்ட் நகர் இல்லத்தில் ம.நடராசன் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வெளியில் வந்த திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராசனுக்கு கடந்த அக்டோபர் மாதத்தில் பல்லுறுப்புகள் செயலிழந்து உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதை அடுத்து அவர் சென்னையை பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அங்கே அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். கல்லீரல், சிறுநீரகம் இரண்டையும் அவருக்கு மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதை அடுத்து, தஞ்சையில் விபத்தில் சிக்கி, மூளைச்சாவு அடைந்த இளைஞரிடம் இருந்து கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை தானமாகப் பெறப்பட்டு, நடராஜனுக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது.
இதன் பின்னர் உடல்நிலை தேறி வந்த நிலையில், சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வந்தார் நடராசன். அவ்வப்போது மருத்துவமனைக்குச் சென்று உடல்நிலையை பரிசோதித்து வந்தார். அவருக்கு சனிக்கிழமை இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட அவர் உடனே குளோபல் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப் பட்டார். அங்கே தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டது. செயற்கை சுவாசம் அளிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுநீரகங்கள் செயலிழந்தன. இதனால் ‘டயாலிசிஸ்’ சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டது. இந்நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி நடராஜன் இன்று அதிகாலை சுமார் 1.30 மணி அளவில் உயிரிழந்ததாக மருத்துவமனை தெரிவித்தது.
மறைந்த ம.நடராசன் உடலுக்கு பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
தலைவர்கள் பலர் இரங்கல் செய்தி வெளியிட்டனர். ம.நடராஜன் மறைவுக்கு, தி.க.தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், ஜவாஹிருல்லா, புகழேந்தி, வேல்முருகன், சுப.வீரபாண்டியன், இயக்குநர் பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.