சென்னை: ராம ராஜ்ய ரத யாத்திரையை எதிர்க்கும் ஸ்டாலின் இந்து மதத்தினரின் வாக்குகளை புறக்கணிப்பாரா என்று அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை ஆவடியில் நகர நில வரித் திட்டத்தின் கீழ் பட்டா வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாஃபா பாண்டியராஜன், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ரத யாத்திரையை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது என்று எதிர்க்கும் ஸ்டாலின், இந்து மதத்தினரின் வாக்குகளும் வேண்டாம் என்று புறக்கணிப்பாரா என்று கேள்வி எழுப்பினார். மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும்; அனைவரின் உரிமைகளும் மதிக்கப்படும் என்று கூறினார்.
முன்னதாக, அயோத்தியில் இருந்து புறப்பட்டு, 5 மாநிலங்கள் வழியாக நெல்லை மாவட்டம் செங்கோட்டைக்கு வந்த ராம ராஜ்ய ரத யாத்திரையை தடுக்கும் நோக்கில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப் பட்டன. தமிழக சட்டமன்றத்தில் பெரும் அமளியை ஏற்படுத்திய ஸ்டாலின், அவையை விட்டு வெளியேற்றப்பட்டு, சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் கைது செய்யப் பட்டு, மதியம் விடுவிக்கப் பட்டார். அவர் மீது கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.