
ஈரோடு திமுக., மண்டல மாநாட்டில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், தற்போதைய அதிமுக., ஆட்சியை அகற்றுவதற்கு தங்களுக்கு ஒரு நொடி கூட தேவையில்லை என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக முதல்வர் எடப்பாடி ஆவேச பதில் ஒன்றை அளித்தார்.
ஜெயலலிதாவின் 70-வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு 86 ஏழை ஜோடிகளுக்கு கோவை தொண்டாமுத்தூர் ராஜலட்சுமி கல்யாண மண்டபம் எதிரில் உள்ள பிரமாண்ட பந்தலில் இன்று திருமணம் நடந்தது. விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது “ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கான வசதிகளை அதிமுக அரசு செய்துள்ளது. அதிமுக ஆட்சியை கவிழ்த்துவிடலாம் என்ற திமுகவின் கனவு நிறைவேறாது.
தி.மு.க மாநாட்டில் பேசிய மு.க ஸ்டாலின் ஒரு சொடக்கு போட்டால் அ.தி.மு.க ஆட்சி கவிழ்ந்து விடும் என பேசி உள்ளார் . கடப்பாரை கொண்டு நெம்பினாலும் அதிமுக ஆட்சியை எதுவும் செய்ய முடியாது.
அதிகாரத்தை விரும்பும் அளவுக்கு மக்கள் நலனில் திமுகவுக்கு அக்கறையில்லை. இன்னும் 3 நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என பேசினார்
இந்தத் திருமண விழாவுக்கு புறநகர் மாவட்ட செயலாளர் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமை தாங்கினார்.
விழாவில் 86 ஜோடிகளுக்கு தாலி எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி அம்மா வீட்டு சீதனமாக 70 வகை சீர்வரிசை பொருட்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் வழங்கினர்.
முன்னதாக பவானி கூட்டுக் குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்து உக்கடம், ஆத்துப்பாலம் மேம்பாலம் கட்டவும் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.



