
விழுப்புரம் : ரஜினியுடன் கூட்டணி அமைப்பதற்காக நாங்கள் ஏங்கி கொண்டிருக்கவில்லை என்றார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
வரும் 27ஆம் தேதி விழுப்புரம் ஜானகிபுரத்தில் நடக்கும் சமதர்ம எழுச்சி மாநாட்டுக்கான கால்கோள் நடும் விழாவில் கலந்து கொண்டார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
அதன் பின்னர் விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசினார் பொன்.ராதா கிருஷ்ணன். அப்போது அவர், நடிகர் ரஜினியுடனான கூட்டணிக்காக பாஜக., ஏங்கவில்லை. கர்நாடகாவில் பாஜக., வெற்றி பெற்றால் மட்டுமே காவிரியில் தண்ணீர் வரும். 150 ஆண்டு கால பிரச்னையும் தீரும் என்றார்.
அப்போது செய்தியாளர்கள் அவரிடம் எஸ்.வி.சேகரை சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ஒரு நிகழ்ச்சிக்கு தாம் சென்ற போது, அங்கிருந்து எஸ்.வி.சேகர் வெளியில் சென்றதாகவும் அப்போது சந்தித்துக் கொண்டதாகவும் தெரிவித்தார். அதற்கு செய்தியாளர்கள், அவரை போலீசாரிடம் பிடித்துக் கொடுத்திருக்கலாமே என்று கேட்ட போது, அதற்கு தமக்கு டி.ஜி.பி. பதவி கொடுக்குமாறு கிண்டலாகக் கூறினார் அவர்.
மேலும், எஸ்.வி.சேகர் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும். எஸ்.வி.சேகரை கைது செய்வது தமிழக போலீசாரின் வேலை. என் வேலையில்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.


