சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தின்போது, போலீஸாரை ரவுண்டு கட்டித் தாக்கிய சீமானின் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மதன்குமார் என்பவரை போலீஸார் கைதுசெய்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இழுத்தடித்த மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் ஐபிஎல்., போட்டிகள் நடத்தப் படக் கூடாது என்று சினிமா இயக்குனர்கள், திரைத்துறையினர், திமுக.,வினர், நாம் தமிழர் கட்சியினர் என எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பலரும் இணைந்து போராட்டங்களை நடத்தினர். போட்டியைக் காண வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை ஓட ஓட விரட்டி அடித்தனர். பெண் ரசிகைகளின் மஞ்சள் நிற சட்டையைக் கழற்ற வைத்து கேவலப் படுத்தினர்.
அப்போது, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாரை நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் கண்மூடித் தனமாகத் தாக்கினார். இந்த வீடியோ அப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. இந்தச் சம்பவத்துக்கு நடிகர் ரஜினிகாந்த்தும் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார். போலீஸ்காரர்களைத் தாக்குவது எத்தகைய காட்டுமிராண்டித் தனம் என்பதை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கண்மூடித்தனமாக போலீஸாரைத் தாக்கியவர் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்தான் என்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில், போலீஸாரைத் தாக்கிய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மதன்குமார் என்பவரை திருவல்லிக்கேணி போலீஸார் இன்று கைதுசெய்துள்ளனர்.


